விபூதியின் பெருமை
சிவபெருமானை வழிபடும் சைவர் களுக்கு சிவச் சின்னமானதாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி.
பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுவது விபூதி.
விபூதி என்பதற்கு மொழியியல்படி, பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
இறையருள் பெற்றது, உயர்விலும் உயர்வானது, முழுமையானது, எங்கும் நிறைந்திருப்பது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது, வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது, வளங்களைத் தரக்கூடியது, சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது, அலங்கரிப்பது.
சிவபெருமானின் திருமேனி முழுவது அலங்கரிக்கக் கூடிய ஒரே பொருள் விபூதி மட்டுமே.
பொன்னார் மேனியனின் திருமேனியில் மேவியிருப்பதால், விபூதி பொன்னிறமாக, தங்கத் துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: – ஸ்ரீ சிவாஷ்டோத்தரம்)
விபூதி காட்டும் தத்துவங்கள்:
இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால், இறைவன் முன் அனைவரும் சமம் தான் என்பதையும் சுட்டுகின்றது.
உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால் ஆன்மாக்கள் தூய்மையடைகின்றது.
வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த் திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப் பறைசாற்றுகின்றன.
திருநீறு வகைகள்:
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
அவை
கல்பம்
அணுகல்பம்
உபகல்பம்
அகல்பம்
கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.
அணுகல்பம்
ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
ஐந்து வகை திருநீறு
இரட்சை
சாரம்
பஸ்மம்
பசிதம்
விபூதி
இரட்சை
சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.
சாரம்
சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.
பஸ்மம்
சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.
பசிதம்
பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.
விபூதி
தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.
புராணம்:
ஒரு சமயம், வித்துன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூன்று அரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கொண்டு, தேவர்களை வருத்தினர்.
அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா, விஷ்ணுவிடம் முறையிட, இவர்களை அழித்து சாம்பலாக்க, சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்து, சிவனை நோக்கி பிரார்த்தனை செய்தனர்.
பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும், அவர் தோற்றுவித்ததும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,
மஹா விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும், பாற்கடலில் சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின் கரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்தனர்.
யாகத்தின் பஸ்மம் (சாம்பல்) போல அரக்கர்கள் அழிய பிரார்த்தனை செய்தனர்.
மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார். அது வேதங்களில், விபூதியைப் போற்றக் கூடிய, மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.
பொதுவாக சிவாலயங்களில், விபூதியை அபிஷேகம் செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான் சொல்வது மரபு.
(ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மா பூயாஸம் ஸ்வாஹா)
இந்த மந்திரம் உடல், மனது, வாக்கு, ஆத்மா, அந்தராத்மா என அனைத்தையும் தியாகம் செய்தால், நமது ஜீவனை சிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார் என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையான அர்த்தம் – மிகவும் அற்புதமானது.)
பிரம்மா, விஷ்ணு – இருவரின் தவத்திற்கு இணங்கி, சிவபெருமான் மூன்று அரக்கர்களையும், தன் மந்தகாசப் புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் மகிழ்ந்தனர்.
(ஒரு உபரி தகவல் : முப்புரங்களை எரித்தபொழுது, அக்கோட்டைகளின் ஒரு பாகம் மட்டும் முழுதும் எரியாமல் (வேகாமல்) பூமியில் விழுந்தது. அந்த இடம் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றது.
இவ்விடம், தமிழகம், கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்க உதவினாலும், இந்த ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்கு பயன்படாது.
வேகாத மண் கொண்ட நிலம் என்பதால் வேகாக் கொல்லை என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அருமையான சிவஸ்தலம் உள்ளது
சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை, சிவச் சின்னமாக, புனிதமான பொருளாக சைவர்கள் மதிக்கின்றார்கள்.
விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாக விளக்கியுள்ளன.
காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.
அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)
அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் – பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும்.
தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும்.
(வஸ்திரகாயம் – ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).
அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை. மற்றும் சில முறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.
விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)
சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கை பிரம்ம & விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு தவமிருந்து பெற்றதால் – அவர்களின் பாகமாகிய உள்ளங்கையில்தான் பெற வேண்டும்)
ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,
பெண்கள் – தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
பெண்கள் மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாக அணியலாம்)
அணியும் முறை:
வடதிசை அல்லது கிழக்கு திசையை யாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.
விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.
ஆண்கள் – விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,
நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும், மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)
திருநீறு அணியும் இடங்கள்:
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்
வலது காதில் ஒரு பொட்டு
இடது காதில் ஒரு பொட்டு
காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.
நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை “உத்தூளனம்” எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை “திரிபுண்டரம்” எனப்படும்.
பஸ்மாபிஷேகம் – பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது. குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும்.
பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்படுகின்றது.
விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு.
விபூதியின் புனிதத்தையும் அதன் மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும், திருமுறைகளில் பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னிரு திருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும் இங்கே காண்போம்.
சூலை (தாங்காத வயிற்று வலி) நோயால் துடிதுடித்த அப்பர் சுவாமிகள், தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன், வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.
சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும் மன்னன் மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான். அவனுக்கு தீராத வெப்ப நோய் இருந்தது. அதை நீக்க அவன் மனைவி மங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள். அவள் கனவில் சிவன் வந்து திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால் நோய் நீங்கும் என்றார்.
மங்கையர்க்கரசியாரும், அதன்படியே, திருஞான சம்பந்தரை தரிசித்து, தன் குறையைச் சொல்ல, அவர் ‘மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு’ எனத் தொடங்கும் ‘திருநீற்றுப் பதிகம்‘ பாடி விபூதியை, கூன் பாண்டியனின் உடலில் பூசியவுடன், பாண்டியனின் நோய் நீங்கியது. கூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.
“மந்திரமாவது நீறு” – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.
அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.
புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற முறையில் இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட தீர்க்கமாக விஸ்தாரமாகச் சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.
காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.
பலன்கள்
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும்.
இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும்,திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.
விபூதீரைச்வர்யம் – என்ற சொல் – விபூதி ஐஸ்வர்யங்களைத் தரவல்லது – என்ற அர்த்தம் கொண்டது.
விபூதி அணிவோம் ! விதியை வெல்வோம் !!
