திருக்கழுமலம் – (திருவிராகம்) நட்டபாடை
195
பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்
உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில்
உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர்
கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல்
மருவுமே!
பொ-ரை: பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும், முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், அழகிய இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும் நெல் வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில் எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.
கு-ரை: இறை – முன் கை. இணை முலையவள் இணைவனது – பரஞானம் அபரஞானம் என்ற இரண்டு முலைகளையுடைய உமாதேவியோடு இணைபவனாகிய சிவனது. கறையணிபொழில் – நிழல் மிக்க பொழில். நறையணிமலர் – தேனோடுகூடிய அழகிய மலர். உலகீர்! இடமாகிய கழுமலம் அமர் கனல் உருவினனது கழல் தொழுதலை மருவும் எனக்கூட்டுக. மருவும் – பொருந்துங்கள்.
196
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை;
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர்
சடை மிசை
தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற
மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல்
மருவுமே!
பொ-ரை: இடைவிடாமல் நம்மைப் பிணிக்கும் கடல் போன்றபிறவிகள் நீங்குதல் எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக் கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த திருவடிகளைத் தொழுதல் செய்மின்.
கு-ரை: பிணிபடுகடல் பிறவிகள் – ஆதி ஆன்மிகம் முதலிய பிணிகளோடு தொடக்குண்ட கடல் போன்ற பிறவிகள். தன்னகப்பட்டாரை மீளவிடாதே மேலும் மேலும் பிணிக்கின்ற பிறவிக்கடல் என்றுமாம். அறல் – நீங்குதல். அது பெருகிய திரை உளது – அப்பிறவிக்கடல் மிகப் பெருகுகின்ற அலைகளையுடையது. அனல் உருவினனாகிய மதிபுனைவனை, உமைதலைவனை, கறைமிடறனை, கழலிணை தொழல் மருவும் எனக் கூட்டுக. புனைவன் – சூடுபவன். நிறமணி படும் கறை மிடறன் – ஒளிபொருந்திய நீலமணிபோலும் விடம்பொருந்திய கழுத்தினையுடையவன். நலம் – வீட்டின்பம்.
197
வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர்
கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி
கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு
எய்துமதே.
பொ-ரை: கோடுகள் பொருந்திய புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய், ஒளி மிக்குத் தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை அணிந்த சடையை உடையவனாய், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும் ஆகியகழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை, இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால், அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.
கு-ரை: வரியுறுபுரி அதள் – கோடுகள் பொருந்திய புலித்தோல். வளர்பிறையையும் கதிரையும் பொதிந்த விரியுறுசடையையுடைய இறைவன், கழுமலம் அமர் இறைவன் எனத் தனித் தனிக் கூட்டுக. எரியுறு நிற இறைவன் – தீவண்ணன். பரவுவர் தமது நினைவெய்தும் எனக்கூட்டுக. எரியுறுவினை – வருத்துகின்ற நல்வினை தீவினைகள். கதிர்முனை இருள் – ஒளிப்பொருளாகிய சூரியனையும் வெறுத்தோட்டுகின்ற இருள் என்றது ஆணவமலம் என்றவாறு. நனி நினைவெய்தும் – தயிலதாரை போல இடைவிடாது இறைவன் நினைப்பெய்தும்.
198
வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது
எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை
உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர்
கழல்களே!
பொ-ரை: உயர்ந்த பிறை மதி, கொடி போன்ற இடையையுடைய கங்கை, மந்திரப்பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும், வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும், ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை, வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.
கு-ரை: குலமதிபுனை – உயர்ந்த பிறைமதியை அணிந்த கொடியிடை -சுற்றிக் கொண்டிருக்கின்ற காட்டுக்கொடிகளினிடையே. பொருள்தரு படுகளிறினது – பல பொருள்களைக் கொண்டு வருகின்ற இறந்த யானையினது. உரி – தோல். இவருடைய மேனியின் செவ்வொளியைக் களிற்றின் கருந்தோல் புதைத்தது என்பதாம். மனைகுடவயிறு உடையன குறள் படை – வீட்டுக்குடம் போன்ற வயிறு உடையனவாகிய பூதப்படைகள். கதிர் மதியினன் – சூரியனையும் சந்திரனையும் தமது திருக்கண்களாகப் படைத்தவன். உடலினன், உடையவன், மதியினன், கழல்கள். வினைகெட மனநினைவது முடிகெனின், நனிதொழுது எழு எனக்கூட்டுக. மனநினைவிற்கு எல்லாம் காரணமாகிய வினைகள் கெடவும், மனம் நினைந்தது நிறைவேறவும், விரும்பின், கழல்களைத்தொழுதெழு என்று நெஞ்சை நோக்கி அறிவித்தவாறு. முடிக எனின் என்பது முடிகெனின் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. முடியுமாயின் எனப் பொருள் காண்பதும் உண்டு. பொருந்துமேல் கொள்க.
199
தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை
இடை உடன்-
நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல்
கணையினன்;
மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.
பொ-ரை: நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன், ஒரு நாட்பிறை, கங்கை, நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.
கு-ரை: இடமருளினன், கணையினன், மருவினன் தலைவன் எனப்பொருந்த முடிக்க, தலைமதி – ஒருநாட்பிறை. தலைமையது ஒருசடைஇடை – தலைமையதாகிய சடைக்காட்டின் நடுவில் பகைபட்ட பொருளாகிய மதி அரவு இவைகளைப் பகை நீங்கி வாழ ஓரிடத்து அருளினன் என்பது குறித்தவாறு. நிழல் மழு – ஒளிவிடுகின்ற மழு. மலை மருவிய சிலைதனில் – மேருமலையாகிய வில்லில்.மதில் – முப்புரங்கள். மனம் மருவினன் – மனம் பொருந்தினன். நலகலை மருவிய புறவு – நல்லகலைமான்கள் பொருந்திய சிறுகாடு. புறவம் என்ற தலப்பெயர்க் காரணம் புலப்படும்.
200
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி
மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல்
உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ,
அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல்
ஒருதலைமையே.
பொ-ரை: மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ள வரிகளாக அமைந்த மணற்பரப்பில் அமைந்ததும், கரையைப் பொரும் கடல் அலைகளின் ஓசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும், கனல் போலும் சிவந்த திருமேனியனும், இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத்தொழின், போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட, மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.
கு-ரை: கழுமலத்தில் எழுந்தருளியுள்ள. தீவண்ணப் பெருமானின் திருவடியைத் தொழ, வினை யென்னும் சொல்லும் பொடி பட உயர்ந்த உலகத்தை யடைதல் துணிபு என்கின்றது. அருவிகள் பல பருகு ஒருகடல் – பல அருவிகளைப் பருகுகின்ற பெரியகடல். திரை ஒலி கெழுமிய கழுமலம் – அலையோசையோடு எப்பொழுதும் கூடியிருக்கிற சீகாழி. உரையும் பொடிபடவே அதன் பொருளாகிய வினைபொடிபடுதல் சொல்லாமலேயமையும் என்பதாம்.
201
முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்;
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை;
இருள் கடி
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை,
அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு
அறியமே.
பொ-ரை: மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்றமதியைச் சூடிய சடையை உடையவனாய், உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய், இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.
கு-ரை: நற நிறை தலைதனில் – தேனிறைந்த திருமுடியில். முதிர் உறுகதிர் வளர் இளமதி – முதிர்ச்சியடையும் கதிர்கள் வளரும் இளைய ஒருகலைப்பிறைச்சடையை யுடையவனை; உதிர் உறுமயிர்பிணை – உதிரத்தக்க மயிர்கள் உதிராதே பிணைந்திருக்கும், தவிர் தசையுடை புலியதள் – கழன்ற தசையையுடைய புலித்தோலை உடுத்த. இடை – இடையினை யுடையவனை. இடை என்பது உடையானைக் காட்டி நின்றது. படையையும் கழலையும் உடைய அடிகள். அடிகளின் திருவடியைத்தொழும் அறிவல்லது பிறவற்றை யறியோம் என்று உறைத்த திருத்தொண்டைக் கூறியருளியவாறு.
202
கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, “அடி சரண்!” என,
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி
கிளர் பிறை,
விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை
உடையவன், உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர்
அதே.
பொ-ரை: கடல் போன்ற கரிய நிறத்தினனும், நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்க வாட்படை அருளிய புகழுடையவனும், பாம்பை இடையில் கட்டியவனும், அழகுமிக்க பிறையை அணிந்தவனும், விடம் தங்கிய கண்டத்தை உடையவனும், விரித்த சடையை உடையவனும், விடை ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி, கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.
கு-ரை: கடல் என நிறநெடு முடியவன் – கடலை ஒத்த நிறத்தையுடைய நீண்ட கிரீடத்தை யணிந்தவனாகிய இராவணன். அடுதிறல் தெற – பிறரை வருத்தும் வலிமை தொலைய என்றுமாம். அடி சரண் என – திருவடியே அடைக்கலமாவது என்று கூற. அடல் நிறை படை – கொலை நிறைந்த படையாகிய சந்திரகாசம் என்னும் வாள். அரவு அரையினன் – பாம்பை இடுப்பிலணிந்தவன். கடல் மறுகு உடை – கடலுங் கலங்குதலை உடையகாலத்து.
203
கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும்,
அவன்
விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி
விழவு அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர்
அருவினை
எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன்
உலகமே.
பொ-ரை: செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன், திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான், மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.
கு-ரை: கொழுவிய தாமரைமலரை உறையுமிடமாக உடைய பிரமன். நெடியவன் – திருமால். அவன் – சிவன். விழுமை – பெருமை. இறையளவு அறிகிலர் எனவும். நிலவகைதனில் வினை எழுமையும் இல. இமையவர் வியன் உலகம் எளிது எனவும் இயைத்துப் பொருள்காண்க.
204
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண்
உருவர்கள்,
சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற
உரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே!
பொ-ரை: தமக்குப் பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை அணிந்தவர்களாகிய புத்தர்களும், ஆடையற்ற சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் ஆகிய அவை வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன் அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.
கு-ரை: அமைவன – பொருந்துவனவாகிய. துவர் இழுகிய துகிலினர் – மருதந்துவர் ஊட்டின ஆடையராகிய புத்தர். அமண் உருவர்கள் – சமணர்கள். ஒருபொருளெனும் சமயமும், அறவுரைகளும் ஆகிய அவை சலநெறியன – மேற் கூறிய புத்தரும் சாக்கியரும் ஒரு பொருளாகக் கூறும் சமயங்களும், அவற்றில் அவர்கள் கூறும் தர்மோபதேசங்களும் ஆகிய அவைகள் வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன. நமையல – வருத்தா. “நமைப்புறுபிறவிநோய்” என்னும் சூளாமணிப்பகுதியும் இப்பொருட்டாதல் காண்க. “நும்மால் நமைப்புண்ணேன்” என்ற அப்பர் வாக்கும் நினைவுறத் தக்கது. வினை நலன் அடைதலின் நமையல நனி உயர்நெறி நணுகுவர்கள் என இயைக்க.
205
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர்
திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-
மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.
பொ-ரை: பரந்துபட்ட நூல்களைக் கொண்டுள்ள தமிழ்மொழியை ஆழ உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞானசம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதிமனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.
கு-ரை: தமிழ் விரகினனாகிய பெயரவன் பரவிய மொழிகள் பத்தும் மருவிய மனம் உடையவர் மதியுடையர் விதியுடையவர்கள் எனக் கூட்டுக. மலிபெயரவன் – நிறைந்த புகழ் உடையவன். உறைபிணர் திரையொடு – நீர்த்துளிகளோடு மடங்குகின்ற அலைகளோடு. பிணைமொழியன – அன்பு பூட்டிய மொழிகள்.
குருவருள்: இப்பதிகம் ஒருபது பாடல்களையும் மருவிய மனம் உடையவர். நன்மதியுடையவராவர். அவர் நல்விதி உடையவரும் ஆவர். எனவே, இறைநெறி சேராதார் நல்மதியும் நல்விதியும் உடையவராகமாட்டாராய் இடர்ப்படுவர் என்பது குறிப்பெச்சம்.