கல்வி
குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 1
கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. 2
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன்று இலாத மணிவிளக் காமே. 3
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் பல்லி யுடையார் பரம்பரிந்து உண்கின்றார் எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. 4
துணையது வாய்வரும் தூயநற் சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. 5
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும் கோலொன்று பற்றினால் கூடா பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. 6
ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும் தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. 7
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 8
பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. 9
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து உடலுடை யான்பல ஊழிதொ றூழி அடல்விடை யேறும் அமரர்கள் நாதன் இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 10