மூவகைச்சீவ வர்க்கம்
சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச் சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச் சித்தம் புகுந்து சிவமய மாக்குமே 1
விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத் தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே 2
விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே 3
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவ துள்ளே இருமல பெத்தர் இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே 4
பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே 5
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர் அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர் நவமான தத்துவம் நாடிக்கண் டோரே 6
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம் விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே 7
வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே தஞ்ஞான கன்மத்தி நால்சுவர் யோனிபுக் கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய் மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே 8
ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர் காணிய விந்துவா நாத சகலாதி ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே சேணுயர் சத்தி சிவதத் துவமாமே 9