வீரட்டம் எட்டு
கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே 1
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித் தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே 2
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந் தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே 3
எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை யோதிபாற்1 பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின் அங்கு விரற்குறித் தாழிசெய் தானே 4
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே 5
முத்தீ கொளுவி முழங்கெரி வேள்வியுள் அத்தி யுரியர னாவ தறிகிலர் சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே 6
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே 7
இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி இலிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயலழித் தங்கண் அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே 8